Published : 01 Aug 2019 03:54 PM
Last Updated : 01 Aug 2019 03:54 PM

ஆயுள்தண்டனை கைதி விடுதலை விவகாரம்: அரசு முடிவை விவாதிக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

சென்னை

ஆயுள் கைதியை முன் விடுதலை செய்ய மறுத்த உத்தரவு சரியா?, தவறா? என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொலை வழக்கு ஒன்றில்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 1999-ம் ஆண்டு சேலம் மத்திய சிறையில் இருக்கும் தருமபுரியை சேர்ந்த செந்தில் என்பவரை நன்னடத்தையுடனும் மற்றும் சக கைதிகளுக்கு யோகா பயிற்சியும் வழங்குவதன் அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட கோரி அவரது தாயார் அமுதா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அவரது கோரிக்கையை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென சேலம் சிறை கண்காணிப்பாளருக்கு 2018 செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என சேலம் சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு ஆயுள் கைதிகளை விடுதலைச் செய்வதில் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கேள்வி எழுப்பி, யோகா செந்திலின் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, யோகா செந்திலின் முன் விடுதலைக் கோரும் மனுவை உயர் நீதிமன்ற உத்தரவுபடி 6 வாரத்தில் பரிசீலித்தப் பின்னரே அவரை விடுதலை செய்ய முடியாது என உள்துறை  முடிவு எடுத்ததாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் நடைபெறவில்லை எனத் தெரிவித்தார்.

அதேசமயம் அரசு எடுத்த முடிவு சரியானதா என நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது என்றும், அந்த முடிவை எதிர்த்துத் தனி  வழக்காகத்தான் தொடுக்க முடியுமென விளக்கமளித்தார். அதனை பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ஆர்.பாலசரவணக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x