Published : 13 Jul 2015 09:42 AM
Last Updated : 13 Jul 2015 09:42 AM

ஏ.டி.எம். இயந்திரங்களில் அதிகளவில் 50, 100 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும்: உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை

ஏ.டி.எம். இயந்திரங்களில் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் வைக்க வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த வாசகர் ஆர்.எத்திராஜன் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:

பொதுமக்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து 24 மணி நேரமும் பணத்தை எடுப்பதற்கு வசதியாக ஏ.டி.எம். இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அதே நேரத்தில் இந்த இயந்திரங்களில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே அதிகளவில் வைக்கப்படுகின்றன. 100 ரூபாய் நோட்டுகள் குறைவாக வைக்கப்படுகிறது. 50 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுவதே இல்லை.

இதனால், ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் எடுப்பவர்கள் சில்லறைக்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பொதுமக்களின் வசதிக்காக ஏ.டி.எம். இயந்திரங்களில் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூபாய் நோட்டுகளை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே வைக்க முடியும். எனவே, அதிக மதிப்புள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகளவிலும், குறைந்த மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலும் வைக்கப்படுகின்றன. இதனால்தான் சில்லறை கிடைப்பதில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x