Last Updated : 24 Jul, 2015 05:48 PM

 

Published : 24 Jul 2015 05:48 PM
Last Updated : 24 Jul 2015 05:48 PM

கோவை ரயில் நிலையத்தில் ஊழியர்களின் வாகனம் நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து முறைகேடாக வசூல்?

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து, பொதுமக்கள் நிறுத்தும் வாகனங்களுக்கு முறைகேடாக பணம் வசூலித்து வருகின்றனர்.

கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள ரயில் நிலைய நுழைவுவாயில் பகுதியில் ரயில்வே ஊழியர்கள் மட்டும் அவர்களது இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பயணிகளின் கார்களை மட்டும் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் தனியாரால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அனுமதி இல்லாத அந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த அனுமதித்து தினமும் முறைகேடாக சிலர் பணம் வசூலித்து வருவதாக ரயில்வே ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கோவை ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘ரயில்வே நிலைய வாகன நிறுத்தத்தை ஒப்பந்தத்துக்கு எடுத்து நடத்தி வரும் அதே நபர், ஊழியர்களுக்கான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தையும் ஆக்கிரமித்து வசூலித்து வருகிறார்.

ரயில்வே சார்பில் அந்த இடத்தில் கட்டணம் வசூலிப்பதற்கு ஒப்பந்தம் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இருப்பினும், அவர்களாக அந்த இடத்தைக் கைப்பற்றி வசூல் நடத்துகின்றனர். தினமும் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கிலான வண்டிகள் தற்காலிகமாக நிறுத்தி எடுத்துச் செல்லப்படுகின்றன. வசூலிக்கும் கட்டணத்தில் ‘மேலிடத்துக்கும்’ பங்கு செல்கிறது என்பதால் யாரும் கண்டு கொள்வது கிடையாது. அதனால், நாங்களும் கேள்வி கேட்க முடியாமல் உள்ளோம்’ என்றார்.

ரயில்வே நிலைய மேலாளர் சின்னராஜூ கூறும்போது, ‘அந்த இடத்தில் ரயில்வே ஊழியர்கள் மட்டும்தான் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த வேண்டும். ஆனால், நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அந்த இடத்தில் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். அதனால் வேறு வழியின்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனிமேல் அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாதவாறு ரயில்வே போலீஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x