Published : 20 Jul 2015 04:28 PM
Last Updated : 20 Jul 2015 04:28 PM
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து அதிமுக எம்.பி.க்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகி, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நடந்த அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்றார்.
இது தொடர்பாக அதிமுக இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கவுள்ளது. இதையொட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில் இன்று அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத் தொடரில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தின்போது, அதிமுக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள மத்தியப் பிரதேசத்தை மையம் கொண்ட வியாபம் ஊழல் விவகாரம், ஐ.பி.எல். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள லலித் மோடிக்கு உதவியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைகள் முதலானவை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.
மேலும், நான்காவது முறையாக நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க உள்ளதால் அதுதொடர்பான மசோதா மழைக்கால தொடரில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT