Published : 16 Jul 2015 08:38 AM
Last Updated : 16 Jul 2015 08:38 AM

சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஜீப் கவிழ்ந்து: தீப்பற்றியதில் 6 பெண் தொழிலாளர்கள் பலி

சிவகாசியில் - சாத்தூர் சாலை யில் நாரணாபுரத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று மாலை பணி முடிந்து 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பட்டாசு ஆலைக்கு சொந்தமான ஜீப் ஒன்று சிவகாசி நோக்கி சென்றது. பாரபட்டி அருகே வந்தபோது, சாலையோரத்தில் பட்டாசுக் கழிவுகள் எரிந்து கொண் டிருந்தன. இதனால் ஏற்பட்ட புகை சாலையை மறைத்ததால் அவ்வழியே வந்த பட்டாசு ஆலை ஜீப் எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றியது.

இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த சிவகாசி புதுத்தெருவைச் சேர்ந்த மதியழகன் மனைவி முருகேஸ்வரி (38), பள்ளபட்டியைச் சேர்ந்த கருப்பையா மனைவி இருளம்மாள் (70), அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மனைவி குமாரி (24), பள்ளபட்டியைச் சேர்ந்த குருசாமி மனைவி கனகா (30) ஆகியோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுதவிர மேலும், இரு உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஜீப்பில் சென்ற மேலும் 8 பெண் தொழிலாளர்கள் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x