Published : 14 Jul 2015 09:54 AM
Last Updated : 14 Jul 2015 09:54 AM

ஹெல்மெட் அணியாத 1.44 லட்சம் பேர் மீது வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 1 முதல் 12-ம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1,44,503 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஹெல்மெட் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தன்னையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வாதிட்டார். அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜரானார்.

வழக்கு விசாரணையின் விவரம்:

பால்கனகராஜ்:

ஹெல் மெட் அணியாமல் செல்லும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி மன்றமும், ஊடகங்களும் கிண்டலாகக் கூறுவதை ஏற்க முடியாது.

நீதிபதி கிருபாகரன்:

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை எதிர்த்து மதுரை, திருச்சி வழக்கறிஞர்கள் நடத்திய பேரணியில் எழுப்பப்பட்ட கோஷங்களும், நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களும் எனக்கு எதிராக உள்ளன. வேறு ஏதோ காரணத்துக்காக இந்த உத்தரவை எனக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்.

பால்கனகராஜ்:

வழக்கறிஞர் களில் 80 சதவீதம் பேர் நல்லவர் களாக இருக்கின்றனர்.

நீதிபதி:

90 சதவீதம் வழக்கறி ஞர்கள் நல்லவர்கள்தான். 10 சதவீதம் பேரால் மட்டுமே பிரச்சினை எழுகிறது. அவர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால், இவர்கள் எல்லாம் வழக்கறி ஞர்களாக என்று ஆச்சரியமாக இருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியின் போது, அந்த வழியே ஹெல்மெட் அணிந்து சென்ற பொதுமக்களிடம் ஹெல்மெட்டை கழற்றியதுடன், எதிர் பிரச்சாரத் திலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உண்மையிலேயே வழக்கறிஞர் கள் தானா?

வழக்கறிஞர்கள் சட்டப்படிதான் செயல்பட வேண்டும். நான் சட்டத் துக்கு எதிராகவோ, புதிதாகவோ உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஹெல்மெட் அணியாததால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. கழுத்து வலி இருப்பவர்கள் ஹெல்மெட் போட முடியவில்லை என்கிறார்கள். அவர்கள் வாகனம் ஓட்ட வேண்டாம். இதை அவர்கள் நல்லதுக்காகத்தான் சொல்கிறேன்.

பால்கனகராஜ்:

ஹெல்மெட் அணியாதவர்களின் ஆவணங் களை பறிக்கும்படி சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஹெல்மெட் வாங்குவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.

நீதிபதி:

ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள அவருக்கே உரிமை கிடையாது என்று அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21 கூறுகிறது. அதன்படி உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் எந்த உத்தரவு வேண்டுமானாலும் நீதிமன்றம் பிறப்பிக்கலாம். ஹெல்மெட் விவகாரத்தில் நீதிமன்றத்தின் அதிகாரம் என்னவென்பது எனக்கு தெரியும். யானை வாங்குகிறவன் அங்குசம் வாங்கித்தான் ஆக வேண்டும். அதுபோல வாகனம் வாங்குபவர்கள் ஹெல்மெட் வாங்க வேண்டும். ஹெல்மெட் விவகாரத்தில் நான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.

தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன்:

ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறி செயல்பட்டதாக தமிழகம் முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 1,44,503 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் உள்ள வடக்கு மற்றும் தென் மண்டலங் களில் 14,503 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றங்கள் முன்னுரிமை தர வேண்டும். நடமாடும் நீதிமன்றமும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால், மாலை நேர நீதிமன்றங்கள் சனிக்கிழமையும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மதுரை, திருச்சியில் நடந்த பேரணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வழக்கு விசாரணையை இன்று (செவ் வாய்க்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x