Published : 05 Jul 2015 04:37 PM
Last Updated : 05 Jul 2015 04:37 PM

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட பாமக கோரிக்கை

நாடு முழுவதும் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரங்களை வெளியிட வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

பாமகவின் தலைமைச் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

'இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரங்களில் ஊரகப் பகுதி மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்த தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளன. நகர்ப்புற மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில், சாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி ஊரக இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 68.52% என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஊரக மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு நிலைமை மிக மோசமாக உள்ள நிலையில் இடஒதுக்கீடு போன்ற சமூக நீதி சார்ந்த நடவடிக்கைகளின் மூலம் தான் அவர்களை முன்னேற்ற முடியும். இந்தியாவில் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சாதி அடிப்படையில் வழங்கப்படும் இடஒதுக்கீடு தான் பொருத்தமானதாக இருக்கும். அதற்கான அடிப்படைத் தேவை சாதி அடிப்படையிலான மக்கள் தொகை எனும் நிலையில், அதுகுறித்த தகவல்களை வெளியிடாமல் முடக்கி வைப்பது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதன் நோக்கத்தையே சிதைந்து விடும்.

எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும்' என்று தீர்மானம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும், தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கும் செயல்படாத ஜெயலலிதா அரசுக்கு கண்டனம், சட்டப்பேரவையை கூட்டி மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும், நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும், அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்த கர்நாடக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி தேவை, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், மீனவர்கள் கைது மற்றும் தாக்குதலை தடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்களை பாமக நிறைவேற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x