Published : 14 Jul 2015 11:56 AM
Last Updated : 14 Jul 2015 11:56 AM
பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து நாளை முதல் (15.7.2015) தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து 15.7.2015 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இதேபோல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடக் கோரி அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 15.7.2015 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்பட்டுள்ளது.
இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT