Published : 03 Jul 2015 08:11 AM
Last Updated : 03 Jul 2015 08:11 AM
சென்னை அமைந்தகரை கன்னியப்பன் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(68). இரு சக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி இறந்துவிட்டார். 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். நடராஜன் தினமும் இரவில் புதிய ஆவடி சாலை-வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் உள்ள பிளாட்பாரத்தில் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவிலும் வழக்கம்போல தூங்கினார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் வேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தின் மீது ஏறியது. அங்கே தூங்கிக் கொண்டிருந்த நடராஜன் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக இறந்தார். அதன் பிறகும் வேகம் குறையாக கார் சாலையோர சுவரில் மோதி நின்றது.
அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடராஜனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். காரை ஓட்டி வந்த விவிலியன்ராஜ் (25) என்பவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெருங்குடியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக இருப்பதும், பணி முடிந்து இரவில் மது குடித்துவிட்டு வந்து விபத்தை ஏற்படுத்தியிருப்பதும் தெரிந்தது.
சில மாதங்களுக்கு முன்பு பாரிமுனையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேர் பலியாகினர். இப்போது அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT