Published : 05 Jul 2015 11:27 AM
Last Updated : 05 Jul 2015 11:27 AM

ரூ.75 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்: மர்ம நபர்களுக்கு போலீஸார் வலை

செவ்வாப்பேட்டை அருகே ரூ.75 லட்சம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ் வரன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்துடன் வீட்டைக் காலி செய்துவிட்டு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டையை அடுத்த கந்தன்கொல்லையில் குடியேறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வைத்தீஸ்வரனின் நண்பரான கிருஷ்ணசாமி என்பவரை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணசாமி கொடுத்த தகவலின் அடிப்படையில் மர்ம நபர்கள் கந்தன்கொல்லைக்குச் சென்று வைத்தீஸ்வரனையும் நேற்று முன்தினம் கடத்திச் சென்றதாக தெரியவருகிறது.

இதற்கிடையே, கிருஷ்ணசாமி யை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் இந்நிலையில், வைத்தீஸ்வரனின் மனைவி புவனேஸ்வரிக்கு நேற்று ஒரு அலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உங்களது கணவரை நாங்கள் கடத்திச் சென்றுள்ளோம். ரூ.75 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி செவ்வாப் பேட்டை போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அழைப்பு வந்த அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டனர். அப்போது, அந்த அலைபேசி அணைக்கப்பட்டு இருந்தது.

வைத்தீஸ்வரனை பண விவகாரம் தொடர்பாக யாராவது கடத்திச் சென்றார்களா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x