Published : 21 Jul 2015 11:32 AM
Last Updated : 21 Jul 2015 11:32 AM

இரவில் அதிக வேகமாக செல்லும் மாநகர பஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

பராமரிப்பின்றி கிடக்கும் வள்ளுவர் கோட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி கிடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’ உங்கள் குரலில் வாசகர் பாண்டிச் செல்வம் கூறியதாவது:

சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி குப்பையாக இருக்கிறது. கண்காட்சிகள் நடக்கும்போது போடப்படும் குப்பை, மற்ற நாட்களில் சுத்தம் செய்யப்படுவதில்லை. மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடுகிறது. முதல் தளத்தில் குறள்கள் எழுதப்பட்டிருக்கும் இடங்கள் மின் விளக்குகள் இல்லாமல் இருட்டாக கிடக் கின்றன. சில இடங்களில் குறள்களின் விளக்கங்கள் சேதமடைந்துள்ளன.

பொதுமக்கள் பயன் பாட்டுக்கு அங்கிருக்கும் கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை. துர்நாற்றம் வீசுகிறது. கண்காட்சிகள் நடக்கும் நாட்களிலேயே இந்த நிலை என்றால், மற்ற நாட்களில் எப்படி இருக்கும். பிற நாட்டு சுற்றுலா பயணிகள் வந்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?. முதல் தளத்தில் மின் விளக்குகள் இல்லாததால் குறள்களை படித்து பார்ப்பதும் கடினமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, “புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கு ரூ.18 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளும் விரைவில் ஏற்படுத்தப்படும். போதிய பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகு முறையான கண்காணிப்பு இருக்கும்”என்றார்.

***

இரவில் அதிக வேகமாக செல்லும் மாநகர பஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம்

சென்னையில் இரவில் அதிக வேக மாக செல்லும் பஸ்களால் சாலை விபத்து கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விதிமுறைகளை மீறும் ஓட்டுநர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென பயணிகள் கோரிக்கைவிடுத்துள் ளனர்.

சென்னையில் தாம்பரம், வடபழனி, பிராட்வே, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இரவு நேரத்தில் 64 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், சில வழித்தடங்களில் மாநகர பஸ்களை வேகமாக ஓட்டிச் செல்வ தால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் டி.லட்சுமிபதி கூறியிருப்பதாவது:

பயணிகளின் வசதிக்காக சில முக்கிய வழித்தடங்களில் இரவு நேர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது வெளியூரில் இருந்து வரும் பயணிகள் மற்றும் இரவு பணி முடித்து வருவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரவு நேரங்களில் சாலைகளில் நெரிசல் இன்றி இருப்பதால், மாநகர பஸ் ஓட்டுநர்கள் அதிவேகமாக பஸ்களை ஓட்டிச் செல்கின்றனர்.

இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான் போரூரில் இருந்து பிராட்வேக்கு இரவில் சென்றபோது, பார்த்திருக்கிறேன். விபத்து ஏற்படும் அளவுக்கு வேகமாக சென்று திடீரென ஓட்டுநர் பிரேக் போட்டார். பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். எனவே, அதிக வேகமாக செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், மாநகரில் எல்லை அதிகரித்துள்ள நிலையில், இரவில் பஸ் தேவை அதிகரித்துள்ளது. பகலில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களை இரவு 9.30 மணி முதலே படிப்படியாக நிறுத்திவிடுகின்றனர். இதனால், புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள் ளாகின்றனர். எனவே, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை இரவு 10 மணி வரையிலாவது இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘இரவில் கூடுதல் பஸ்களை இயக்குவது பற்றி தேவையை கருத்தில் கொண்டு நிர்வாகம்தான் முடிவு செய்யும். மேலும், வேகமாக செல்லும் பஸ்ஸின் எண்ணை பயணிகள் பதிவுசெய்து, எங்களுக்கு புகாராக அனுப்பினால், நாங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகவுள்ளோம்’’ என்றார்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x