Published : 07 Jul 2015 08:44 PM
Last Updated : 07 Jul 2015 08:44 PM

சென்னை விமான நிலைய விபத்துகளை தடுக்க குழு அமைக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள் உடைந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்க குழுவை அமைத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை விமான நிலையத்தில் புதிய முனையங்கள் செயல்படத் தொடங்கியதில் இருந்து மேற்கூரை இடிந்து விழுதல், கண்ணாடிக் கதவுகள் உடைதல் என இதுவரை 44 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் தலைக்கவசம் அணிந்து வரும் நிலைக்கு தள்ளப்படுவார்களோ என்று எண்ணம் மேலோங்குகிறது.

அதிகாரிகள் உடனடியாக ஒரு குழு அமைத்து விமான நிலையம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஒரு விபத்து கூட நிகழாத வண்ணம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான நிலையத்தில் ஊழியர்களும், பயணிகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்.

அதேபோல பயணிகளை வரவேற்கக் காத்திருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமருவதற்கு வசதியில்லாத நிலை சென்னை விமான நிலையத்தில் நிலவுகிறது. போதிய இருக்கைகளை அமைத்துத் தர வேண்டும்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x