Published : 27 Jul 2015 09:08 AM
Last Updated : 27 Jul 2015 09:08 AM
சென்னையில் சுரங்க வழிப்பாதையில் அமையவுள்ள 19 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. கோயம்பேடு எழும்பூர் இடையே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் பிப்ரவரியில் நடைபெற உள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 24 கி.மீ தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையும், 21 கி.மீ தூரத்துக்கு உயர்மட்ட ரயில்பாதையும் (13 ரயில் நிலையங்கள்) அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்து, ரயில்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்த பிறகு சிக்னல்கள் அமைத்தல், ரயில் நிலையங்கள் அமைத்தல், ரயில் நிலையங்களில் ஏசி வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் படிப்படியாக நடக்கவுள்ளன. ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப் பட்டு வரும் பிப்ரவரி மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட வுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் மொத்தம் 24 கி.மீ தூரத்துக்கு சுரங்க ரயில்பாதை மூலம் மெட்ரோ ரயில் இயக்கப் படவுள்ளது. இதில், ஷெனாய்நகரில் இருந்து திருமங்கலம் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரையிலுமான 9 கி.மீ தூரத்துக்கு முதல்கட்டமாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, திருமங்கலம் வரையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் ரயில் பாதைகளை அமைப்பதற்கான பணிகள் முடிந்துவிடும்.
சிக்னல்கள் அமைத்தல், ரயில் நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதையில் உள்ள 19 ரயில் நிலையங்களிலும் ஏசி வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், செல்போன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களுக்கு தடையின்றி சிக்னல் கிடைக்க சிறப்பு கேபிள் களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டு வரும் பிப்ரவரி மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். 2016 ஜூன் மாதத்தில் இப்பகுதியில் மெட்ரோ ரயில்சேவை மக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT