Published : 11 Jul 2015 10:40 AM
Last Updated : 11 Jul 2015 10:40 AM
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி நேற்று தமிழ் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் நேற்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ‘1965-ம் ஆண்டு இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் கடும் போராட்டங்கள் நடந்தது. அதன் தொடர்ச்சியாக அலுவல் மொழி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசின் அலுவல் மொழிகள் சட்ட விதி 1976 பிரிவு 1-ல், இந்திய அரசுத் துறை அலுவலகங்கள், ஆணையங்கள், நிறுவன அலுவலகங்கள் ஆகியவை, தமிழ்நாடு தவிர இந்தியா முழுமைக்கும் இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி அல்லது ஆங்கிலம் தான் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனியாவது தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும். தங்களின் வாடிக்கையாளர்கள், பயனாளிகள் ஆகியோருடனான தொடர்புகள், அலுவலக ஆவணங்கள், கோப்புகள், உள்ளகத் தொடர்புகள் ஆகியவை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி பலரும் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT