Published : 18 Jul 2015 11:39 AM
Last Updated : 18 Jul 2015 11:39 AM

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் கடத்தல்? ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்களை காணவில்லை. அவர்கள் கடத்தப்பட்டதாக பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

ஆம்பூர் அடுத்த மாதனூர் கீழ்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (62). இவரது மகன் மற்றும் மகள் வழி பேரன்கள் அஜித்குமார் (17), தினேஷ்குமார் (13), தேவராஜ் (13). மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அஜித்குமார் 11-ம் வகுப்பும், தேவராஜ் 9-ம் வகுப்பும், அதே பகுதியில் உள்ள தாகூர் நேஷனல் அரசு நிதியுதவி பள்ளியில் தினேஷ்குமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மாணவர்களின் வீடு அருகருகே இருப்பதால் 3 பேரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவது வழக்கம். கடந்த 15-ம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் 3 பேரும் மாலை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

பள்ளி முடிந்ததும் 3 பேரும் ஒன்றாக வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர், அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு குடியாத்தம் நோக்கிச் சென்றதாக பார்த்தவர்கள் கூறினர். இதனால், மாணவர்கள் 3 பேரும் கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோர் அஞ்சினர்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் மாதவன் நேற்று காலை புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது அவர்களாக எங்காயாவது சென்றுவிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரக்கோணம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட நிலையில், ஆம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் காணாமல்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x