Published : 20 Jul 2015 08:27 AM
Last Updated : 20 Jul 2015 08:27 AM

மீண்டும் உடல்நலக் குறைவு: பத்திரிகையாளர் சோ.ராமசாமி மருத்துவமனையில் அனுமதி - மத்திய அமைச்சர் நலம் விசாரிப்பு

பத்திரிகையாளர் சோ.ராமசாமி, உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘துக்ளக்’ ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி கடந்த ஆண்டில் இருந்து உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 3-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று பகல் 3 மணி அளவில் அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினை இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மத்திய கப்பல் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு சென்று சோ.ராமசாமியை பார்த்து நலம் விசாரித்தனர்.

கனிமொழியிடம்..

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியை பொன்.ராதாகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். சோ.ராமசாமி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்ற கனிமொழி, அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x