Published : 21 Jul 2015 08:00 AM
Last Updated : 21 Jul 2015 08:00 AM

அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் தேக்கம்: நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக பொதுமக்கள் புகார்

ஆவடி அருகே உள்ள அயப் பாக்கம் வீட்டுவசதி வாரிய குடி யிருப்பு பகுதியில் மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீர், குப்பைகளால் அவதிப்படுவதாக, ‘தி இந்து’உங்கள் குரலில் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

‘தி இந்து- உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அயப்பாக்கம் பொது மக்கள் தெரிவித்ததாவது: அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குழாய் மூலம் திருவேற்காடு நகராட்சி பகுதியான கோலடி ஏரியில் விடப்பட்டு வந்தது. இதனால், கோலடியில் நிலத்தடி நீர் மாசடைந் ததால், அப்பகுதி மக்கள், சில ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் குழாய் இணைப்பை அடைத்து விட்டனர்.

இதனால் அயப்பாக்கம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியின் கழிவு நீர், மழைநீர் கால்வாய் வழியாக அம்பத்தூர் ஏரியில் விடப்பட்டது. இதனால், அம்பத்தூர் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்ததையடுத்து, பொதுப் பணித்துறையினர் கடந்த மே மாதம், அம்பத்தூர் ஏரிக்கு வந்த மழைநீர் கால்வாயை அடைத்தனர்.

இந்நிலையில் அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிய 13.83 கோடி ரூபாய் மதிப்பில், 7 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த மே மாதத்துக்கு முன் முடிவுக்கு வந்தது. ஆனால், பணி முடிந்தும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வராததால், குடியிருப்பு பகுதி மற்றும் சாலையில் ஓடிய கழிவுநீரால் அவதிப்பட்ட பொதுமக்கள் கடந்த மாதம் அயப்பாக்கம், அம்பத் தூர்- கோலடி சாலையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது செயல்பட்டு வருகிறது.

ஆனால், கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி களிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் பிரதான மழைநீர் கால்வாய் மற்றும் காலிமனைகளில் தேங்கின.

அந்த கழிவுநீர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் தேங்கிய வண்ணம் உள்ளன. மழைநீர் கால்வாயில் குப்பை களும் தேங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் பல்வேறு நோய் களுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

ஊராட்சி நிர்வாகம் பதில்

அயப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து, தெரிவித்ததாவது:

மழைநீர் கால்வாயில் தேங்கி யுள்ள கழிவுநீரை சமீபத்தில் மோட்டார் மூலம் அகற்றினோம். முழுமையாக அதனை அகற்ற முடியாததால், இன்னும் கழிவு நீர் தேங்கியுள்ளது. அப்படி மழை நீர் கால்வாயில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுநீரை, பொக் லைன் மூலம்தான் அகற்ற முடியும். அப்பணியினை மேற் கொள்ள மழைநீர் கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் இடையூறாக உள்ளன. எனவே, மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீரை அகற்றும் பணியை விரைவில் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x