Published : 16 Jul 2015 08:22 AM
Last Updated : 16 Jul 2015 08:22 AM

ஆதரவில்லாமல் சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்க உதவ வேண்டும்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை தேடி அவர்களை மீட்கும் புதிய திட்டமான ‘புன்னகையை தேடி’ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி தற்போது தமிழகத்தில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இக்குழு கோயில்கள், பஸ் நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடி மீட்கும்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல்துறை, சைல்டு லைன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே மாவட்டத்தில் அது போன்ற குழந்தைகள் சுற்றித்திரிந் தாலோ அல்லது பிச்சை எடுத்தாலோ அந்த சிறார்களையும் குழந்தை தொழிலாளர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்களின் விவரம்: காவல் துறை - 100, சைல்டு லைன் - 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் - 9444516987, காவல் துறை ஆய்வாளர் - 9498148199, 9498100347, காவல் துறை உதவி ஆய்வாளர் - 9498147775, மாவட்ட காவல் அலுவலகம் - 044 27661010, குழந்தைகள் நலக்குழு - 044 27660084, சேவாலயா - 9585681313 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதன்மூலம் அக்குழந்தைகளை காப்பாற்றி மறுவாழ்வு அளிக்க உதவிடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x