Published : 07 Jul 2015 07:57 AM
Last Updated : 07 Jul 2015 07:57 AM
காணாமல் போன டார்னியர் விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என, அந்த விமானத்தில் பயணம் செய்த விமானியின் தாய் வேதனையுடன் தெரிவித்தார்.
சென்னை கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் கடந்த மாதம் 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான கடல் ரோந்துப் பணிக்காக சென்றபோது சிதம்பரம் கடற்பகுதி அருகே இரவு 9.23 மணிக்கு திடீரென காணாமல் போனது. அந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இருந்தனர்.
விமானம் காணாமல் போய் இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. விமானத்தைத் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் இந்திய கட லோர காவல் படையினர் மேற் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. இதுவரை விமானத்தைப் பற்றி ஒரு துப்புக் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில், காணாமல் போன விமானத்தைத் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம் என அந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த விமானி சுபாஷ் சுரேஷின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘விமானம் காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. இதுவரை விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டி சேற்றுக்கு அடியில் சிக்கியிருப்பதால் அதில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனர். மேலும், அந்தப் பெட்டியில் இருந்து ஒரு மாதம் வரைதான் சிக்னல் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே விமானத்தைக் கண்டு பிடிக்கும் பணியில் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்.
மத்திய அரசு விமானத்தைக் கண்டுபிடிக்க இதுவரை வெளி நாடுகளின் உதவியைக் கோர வில்லை. அத்துடன், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கேன்யான் கப்பலை, தேடும் பணியிலிருந்து இவ்வளவு சீக்கிரம் விடுவித்திருக்கத் தேவை யில்லை. மேலும், மத்திய அரசோ, பாதுகாப்புத் துறையோ இதுவரை எங்களைத் தொடர்பு கொண்டு இவ்விஷயம் குறித்து பேசவில்லை.”
இவ்வாறு பத்மா வருத்தத்துடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT