Published : 27 Jul 2015 09:13 AM
Last Updated : 27 Jul 2015 09:13 AM
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி கரையோர மக்கள் ஆடிப்பெருக்கின்போது காவிரி ஆற்றில் நீராடி, காவிரி அன்னைக்கு மலர்தூவி வணங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்காத நிலையில், குடிநீர் தேவைக்கு மட்டும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆடிப்பெருக்கு விழா நெருங்கி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் காவிரி வறண்டு காணப்பட்டது.
ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஏற்கெனவே குடிநீர் தேவைக்கு திறக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கனஅடியுடன் கூடுதலாக 4 ஆயிரம் கனஅடி சேர்த்து, 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 3-ம் தேதி வரை இதே அளவு தண்ணீர் திறக்கப்படும்.
கூடுதல் தண்ணீர் திறப்பால் சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்ட மக்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
இதனிடையே கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவது சுரங்க மின்நிலையம், அணை மின்நிலையம் மற்றும் கதவணை மின் உற்பத்திக்கும் உதவியாக அமைந்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 93.95 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரத்து 926 கன அடியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT