Published : 22 Jul 2015 03:22 PM
Last Updated : 22 Jul 2015 03:22 PM

கனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்: மதுவிலக்கு வியூகத்தில் திமுக பதிலடி

தன் மகனை தமிழக முதல்வராக்கி, மதுவிலக்கு கோப்புகளில் கையெழுத்திடச் செய்யும் கனவு தகர்ந்ததே ராமதாஸின் கோபத்துக்கு காரணம் என திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமுல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அறிவித்து ஓர் அறிக்கையை கருணாநிதி கடந்த 20-7-2015 அன்று வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினை பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பல ஊடகங்களும் வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நற்செய்தி ஊடகங்கள் மூலமாக உடனடியாக நாடு முழுவதும் பரவிவிட்டது.

செய்தியறிந்த தாய்மார்களும், பெரியவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால், பாமக நிறுவனர் ராமதாசுக்கு மட்டும் இந்த நற்செய்தி வேம்பென கசந்திருக்கிறது. கோபம் கொப்பளிக்க அவைகள் எல்லாம் வார்த்தைகளாக வடிவெடுத்து அவர் பெயரில் ஓர் அறிக்கையாக வெளி வந்திருக்கிறது.

"கருணாநிதி பாவ மன்னிப்பு கோருகிறார்", "ராஜாஜியை எள்ளி நகையாடினார்", "ஏமாற்றுகிறவர்", "கருணாநிதிக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது", "மதுவிலக்கைக் கொண்டு வர கருணாநிதி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை" "கருணாநிதியின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்", "கருணாநிதியை, மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்"... இப்படிப்பட்ட அவதூறு அர்ச்சனைகளையெல்லாம் ராமதாஸ் தான் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தலைவர் கருணாநிதி மீது வாரி இறைத்திருக்கிறார்.

1971ஆம் ஆண்டு வாக்கில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நிலையைச் சமாளிப்பதற்காக தவிர்க்க முடியாத நிலையில் மதுவிலக்கை ஒத்தி வைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் உருக்கமாகப் பேசியதையும், 1971இல் கழக அரசு மதுவிலக்கை தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்றாலும், 1974ஆம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியதையும், 1981ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கள்ளுக்கடைகளைத் திறந்ததையும், 1982-83இல் அதிமுக அரசு தனியார்களுக்கு ஐ.எம்.எப்.எல்., சாராய ஆலைகள் துவக்க தனியார் களுக்கு உரிமம் வழங்கியதையும், 2003இல் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா "டாஸ்மாக்" கடைகளையும், பக்கத்திலேயே "சாக்னா" கடைகளையும் திறந்ததையும் அப்படியே மூடி மறைத்து விட்டு, கருணாநிதி மீது மட்டும் பழியையும், பாவத்தையும் சுமத்தப் பார்க்கிறார் ராமதாஸ்.

மதுவிலக்குக் கொள்கைக்கு ராமதாஸ் தான் தான் "பிதாமகர்" போலவும், மதுவிலக்குக் கொள்கை அவருடைய "பிதுரார்ஜித" சொத்து போலவும், அவர் கருதிக் கொண்டிருப்பதால் தான், கருணாநிதியின் அறிவிப்பு, அவருடைய பட்டா நிலத்தில் பிரவேசித்து விட்டதைப் போல - கோபப்பட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

1974இல் தலைவர் கலைஞர் மீண்டும் மதுவிலக்கை அமுல்படுத்தியது - 2006இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 1300 மதுக் கூடங்களை (பார்கள்) மூடியது, 128 சில்லறை மது விற்பனைக் கடைகளை மூடியது, ஆலயங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக் கடைகள் அமையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது, மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் குறைத்தது - இவையெல்லாம் கருணாநிதி செய்தவை அல்லவா?

மதுவிலக்குப் பிரச்சினையில், இவையெல்லாம் கருணாநிதி செய்த சாதனைகளாக ராமதாசுக்கு தெரியவில்லையா? இவைகள் எல்லாம் துரும்பைக் கிள்ளிப் போட்ட காரியங்களாகத்தான் அவருக்குத் தோன்றுகிறதா?

ஏமாற்றுகிறவர் கருணாநிதி என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது கூறுகிற ராமதாசுக்கு, ஞாபகப்படுத்துகிறேன் - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக 20 சதவிகித இட ஒதுக்கீட்டினை தங்களை தைலாபுரத்திலிருந்து அழைத்து வந்து கொடுத்தாரே, அவரா ஏமாற்றுகிறவர்!

கடைசியாக ஒன்று! காந்திக்குப் பிறகு ராமதாஸ் தான் மதுவிலக்குக் கொள்கைக்கு "கார்டியன்" என்ற நினைப்பு அவருக்கு!

இந்த கொள்கையைப் பிடித்துக் கொண்டே, எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாமா என்ற நப்பாசை வேறு அவருக்கு!

பா.ம.க. ஆட்சிக்கு வந்து விட்டால், அவருடைய திருக்குமாரன், முதலமைச்சராகி, மதுவிலக்குக் குறித்து முதல் கையெழுத்திடுவார் என்கின்ற கற்பனை உலக சஞ்சாரம் அவருக்கு.

இத்தனை கனவுகளையும் ஒரே நொடியில் தவிடுபொடி ஆக்கி விட்டாரே கருணாநிதி என்ற கோபத்தின் வெளிப்பாடு தான், ராமதாஸின் கடுமையான அறிக்கை" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x