Published : 12 Jul 2015 05:16 PM
Last Updated : 12 Jul 2015 05:16 PM

கருத்து சுதந்திரத்துக்கு அதிமுக துரோகம் செய்கிறது: ஸ்டாலின்

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்துக்கு அதிமுக அரசு முற்றிலும் துரோகம் செய்யும் வகையில் நடந்துகொள்வதாக, திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

"ஜனநாயகத்தின் அடிப்படை நாகரிகமே சகிப்புத்தன்மைதான். அரசின் மீதான விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மையற்ற போக்கை அதிமுக அரசு கடைப்பிடித்து வருகிறது. அதனால் தான் எதிர்கட்சிகள் மீது அவதூறு வழக்குகள் போடுவதற்கு வசதியாக இருக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றை நீக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

அரசின் மீதான விமர்சனங்களை முன் வைக்கவும், குறிப்பாக அதிமுக அரசு கொள்கை முடிவுகள் எடுக்க முடியாமல் செயலிழந்து கிடப்பதைக் குறை கூறவும் எதிர்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியிலான உரிமை இருக்கிறது.

கடந்த முறை திராவிட முன்னேற்றக் கழக அரசை எவ்வித உண்மையும் இன்றி கடுமையான விமர்சனம் செய்ய இந்த கருத்துச் சுதந்திர உரிமையைத்தான் ஜெயலலிதா தாராளமாகப் பயன்படுத்தினார் என்பதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

இன்னும் சொல்லப் போனால் அவருடைய கடுமையான விமர்சனங்களுக்கும் உரிய விளக்கங்கள் தரப்பட்ட போதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் கூட அப்போது அவர் பேசினார். அது மாதிரி சூழலில் கூட மாற்றுக் கருத்துக்களை மதிக்கும் பண்பைப் பெற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சுதந்திரமாக எந்தவித அச்சமும் இன்றி, விமர்சனங்களை முன் வைக்க எதிர்கட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் உரிமையளித்தது. அவர்களின் அந்த உரிமைக்கு மதிப்பளித்தது.

ஆனால் கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றிலும் துரோகம் செய்யும் வகையில், இப்போதுள்ள அதிமுக அரசு இந்த அவதூறு சட்டப் பிரிவுகள் நீக்கத்தை எதிர்ப்பதோடு மட்டுமின்றி, எதிர்கட்சிகள் மீதும், பத்திரிக்கைகள் மீதும் போடப்பட்டுள்ள எண்ணற்ற அவதூறு வழக்குகளை நியாயப்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆகவே அவதூறு வழக்குப் பதிவு செய்ய வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை நீக்க எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் எதிர்கட்சிகள் மற்றும் பத்திரிக்கைகள் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற்று, தங்கு தடையின்றி கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பளித்து, ஜனநாயம் தழைத்தோங்க அதிமுக அரசு உறுதியேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x