Published : 18 Jul 2015 02:24 PM
Last Updated : 18 Jul 2015 02:24 PM
அரசபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்து கான்கிரீட் கூரைகள் விழும் அபாயம் உள்ளதாக ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஒத்தக்கால்மண்டபம் அருகில் உள்ள அரசபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன.
பல இடங்களில் கான்கிரீட் கூரை வளைந்து தொங்கிய நிலையில் உள்ளது. மழைபெய்தால் நீர் கசிந்து வகுப்பறைக்குள் புகுந்து விடும். மாணவர்கள் வகுப்பறைக்கு நுழையும் வாயிலில், பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சிறுமிகள் கழிப்பிடத்தின் கதவு மூட இயலாத திறந்த நிலையிலேயே உள்ளது. கழிப்பிடத்துக்கு மேற்கூரையும் இல்லை.
இந்த கழிப்பிடத்தை ஒட்டியே சிறுவர்களின் கழிப்பிடமும் உள்ளது. பள்ளியின் சத்துணவுக் கூடத்துக்கு கேஸ் இணைப்பு தரப்பட்டுள்ளது. கேஸ் அடுப்பும் உள்ளது. ஆனால் சிலிண்டர்தான் வருவதில்லை என்கிறார்கள் அங்குள்ளவர்கள். விறகு வைத்து சமைப்பதால், புகைபோக வழியில்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மதிமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் வே.ஈஸ்வரன், இந்த பிரச்சினைகளை தெரிவித்து ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அவர் கூறும்போது, ‘இந்த பள்ளிக்கு மைதானம் வேண்டும் என்பதற்காக அருகில் புறம்போக்கு நிலத்தை தருவதாக இருந்தனர். ஆனால் அந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த கட்டிடம் கட்டியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானமும் பறிபோய்விட்டது. ஏற்கெனவே இருந்த பள்ளி இடத்தில் தற்போது ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த இடத்துக்கு மாற்றாக பள்ளிக்கு மேலும் இடத்தை ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT