Published : 10 Jul 2015 10:38 AM
Last Updated : 10 Jul 2015 10:38 AM

இலவச பை விநியோகத்துக்கு மறுஒப்பந்தம் கோரப்பட்டது ஏன்? - தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் விளக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பைகள் தயாரிப்பதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தகுதி இல்லாததால் மறுஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 2015-16ம் கல்வி ஆண்டில் 90.78 லட்சம் இலவச பைகள் வழங்க ரூ.120.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் 16 நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஒவ்வொரு நிறுவனத் திடம் இருந்தும் முன்வைப்புத் தொகையாக தலா ரூ.1.15 கோடி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு மொத்த ஒப்பந்தங்களையும் ரத்து செய்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பாடநூல் கழக வட்டாரத்தில் உள்ள சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு வரை பைகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்த தகுதியாக ஒருநாள் உற்பத்தித் திறன் 10,000 பைகள் என வரையறுக்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேவையில் 30 சதவீதம் உற்பத்தித் திறன் இருக்க வேண்டும் என்று முதலில் ஒப்பந் தத்தில் குறிப்பிடப்பட்டு, பின்பு அது 15 சதவீதமாக திருத்தப்பட்டது. இதில் சில குளறுபடிகள் நடந்ததாக கருதப்பட்டதால் பாடநூல் கழகத்தின் செயலாளர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் ஏற்கெனவே இருந்த பழைய ஸ்டாக் பைகளை விநியோ கித்து ஓரளவு நிலைமையை சமாளித்தனர். ஆனாலும், கணிசமான மாணவர்களுக்கு பைகள் விநியோகிக்கப் படவில்லை.

இதுதவிர, ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு 77.66 லட்சம் காலணிகள் வழங்க ரூ.120.07 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப் பட்டது. அவர்கள் விநியோகித்த காலணிகளின் அளவுகள் சரியாக இல்லாததால் குழந்தைகளுக்கு பொருந்தவில்லை. ஜாமென்ட்ரி பெட்டிகள், அட்லஸ், கலர் பென் சில்களும் வழங்கப்படவில்லை.

நாடு முழுவதும் 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் ‘தகவல் மற்றும் கணிப்பொறி தொழில் நுட்பம்’ (ICT) என்ற படிப்பு வழங்கப் பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதற்காக கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட ரூ.900 கோடி செல விடப்படாமல் சமீபத்தில் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக தமிழக கல்வித் துறை செயலாளர் சபீதாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தின் கல்வித்துறையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிதாக 76,338 ஆசிரியர்கள் நியமிக் கப்பட்டு அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை. ஆனால் 11, 12-ம் வகுப்பில் சுமார் ஏழரை லட்சம் புத்தகங்கள் மீண்டும் அச்சடிக்கப் பட்டது விமர்சிக்கப்படுகிறது. அது சில காரணங்களின் அடிப்படையில் அரசு எடுத்த கொள்கை முடிவு. அது குறித்து அதிகாரிகள் கருத்து சொல்வதற்கு ஏதும் இல்லை.

புத்தகங்கள் முழுமையாக வழங்கவில்லை என்பது உண்மை யில்லை. 2012-ம் ஆண்டுக்கு முன்பு வரை 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சராசரியாக 10 கிலோ புத்தகங் களை சுமந்து பள்ளிக்குச் சென்றார். குழந்தைகள் சிரமப்படக் கூடாது என்பதால் முதல்வர் அறி வுரையின்படி 2012-ம் ஆண்டிலி ருந்து பருவம் வாரியாக முறையே ஜூன், செப்டம்பர், ஜனவரி மாதங்களில் புத்தகங்கள் பிரித்து வழங்கப்படுகிறது. இதைத்தான் சிலர் புத்தகங்களை முழுமையாக வழங்கவில்லை என்கின்றனர்.

இலவச பைகளை தயாரிப்பதற் கான ஒப்பந்தங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் தகுதி இல்லாததால் மறுஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. காலணிகளைப் பொறுத்தவரை ஸ்மால், மீடியம், லார்ஜ் என்று நிலையான அளவு நிர்ணயித்து தயாரிப்பதால் அளவுகளில் சிறிது மாற்றம் இருக்கலாம்.

தகவல் மற்றும் கணிப்பொறி தொழில்நுட்ப படிப்பு என்பது, மத்திய அரசின் 75 சதவீதம் மற்றும் மாநில அரசின் 25 சதவீத பங்களிப் புடன் செயல்படுத்தப்படும் திட்டம். அந்த தொழில்நுட்பக் கல்வியை சொல்லித் தருவதற்காக இதுவரை 3 முறை ஒப்பந்தம் கோரப்பட்டும் தகுதியான நிறுவனம் கிடைக்கவில்லை. சமீபத்தில்தான் அப்படி ஒரு தகுதியான நிறுவனம் கிடைத் துள்ளது. எனவே, விரைவில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு சபீதா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x