Published : 14 Jul 2015 08:48 AM
Last Updated : 14 Jul 2015 08:48 AM

அவதூறு வழக்கு சட்டப் பிரிவுகளை நீக்க அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்குவதை அதிமுக அரசு எதிர்க்கக் கூடாது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தின் அடிப்படை நாகரிகமே சகிப்புத்தன்மைதான். அரசின் மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மையற்ற போக்கை அதிமுக அரசு கடைபிடித்து வருகிறது. அதனால்தான் எதிர்க்கட்சிகள் மீது அவதூறு வழக்குகள் போடுவதற்கு வசதியாக இருக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றை நீக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

கடந்தமுறை திமுக அரசை எந்த உண்மையும் இன்றி கடுமையான விமர்சனம் செய்வதற்கு, இந்த கருத்துச் சுதந்திர உரிமையைத்தான் ஜெயலலிதா தாராளமாகப் பயன்படுத்தினார். ஆனால் தற்போது கருத்துச் சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரான வகையில், அவதூறு சட்டப் பிரிவுகள் நீக்கத்தை அதிமுக அரசு எதிர்க்கிறது.அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் மீதும் பத்திரிகைகள் மீதும் போடப்பட்டுள்ள எண்ணற்ற அவதூறு வழக்குகளை நியாயப்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆகவே, அவதூறு வழக்கு பதிவு செய்ய வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளை நீக்க எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் பத்திரிகைகள் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற்று, தங்கு தடையின்றி கருத்துகளை பரிமாறிக் கொள்ள வாய்ப்பளித்து, ஜனநாயகம் தழைத்தோங்க அதிமுக அரசு உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x