Published : 12 Jul 2015 05:14 PM
Last Updated : 12 Jul 2015 05:14 PM
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசோ அல்லது அதிமுகவோ தெளிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் இன்று கையெழுத்து பெற்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, "இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான ராஜபக்சவையும் அவரது கூட்டாளிகள், சகாக்களை சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும். அதிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் ராஜபக்ச இலங்கை பிரதமர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சிறிசேனாவும் செயல்படுகிறார்.
எனவே ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். இந்த இயக்கத்தின் மூலம் அடுத்த 3 நாட்களில் 2 லட்சம் கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளோம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின்றன. உண்மையான தகவலை தமிழக அரசோ அல்லது அதிமுகவோ வெளியிட வேண்டும். ஒருவேளை ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் நலம்பெற வேண்டும் என்பது எனது விருப்பமாகும்" என்றார் திருமாவளவன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT