Published : 13 Jul 2015 03:17 PM
Last Updated : 13 Jul 2015 03:17 PM

கோவை பார்க் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ‘மித வேக காற்றாலை விசையாழி கத்தி’ வடிவமைப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

கல்லூரியின் வானூர்தி துறை சார்பில், மின்வெட்டினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மாற்று வழி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான முயற்சிகளை, கடந்த 3 ஆண்டுகளாக துறைத் தலைவர் ஏ.பி.ஹரன், பேராசிரியர் க.பிரசன்ன வெங்கடேஷ், மாணவர்கள் மணிபாரதி, கார்த்திக் ஆகியோர் மேற்கொண்டனர்.

இதன் மூலமாக ‘மித வேக காற்றாலை விசையாழி கத்தி’ கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இது காற்றின் மித வேகமான 3 மீட்டர் விசையில், மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனுடையது. தற்போது புழக்கத்தில் இருக்கும் விசையாழி கத்திகளைவிட, குறைந்த விசையிலேயே செயல்படும்.

இதற்காக எடை குறைந்த கண்ணாடி இழைகளை பயன்படுத்தி, 2.4 கிலோ எடை கொண்ட விசையாழி கத்தியை உருவாக்கியுள்ளனர். இதற்கு முன்பு, 4.7 கிலோ எடையில் தான் விசையாழி கத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்திடம் இருந்து பாராட்டு கடிதம் வந்துள்ளது.

இந்த வடிவமைப்பை வாங்க, இரு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x