Published : 13 Jun 2015 03:57 PM
Last Updated : 13 Jun 2015 03:57 PM
மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் அரசு வேலை வாய்ப்பிலும், உயர்கல்வி பெறுவதிலும் பயன்பெறும் வகையில் கிரீமிலேயர் உச்சவரம்பை ரூ. 10.50 லட்சமாக உயர்த்தி அவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு வேலை வாய்ப்பிலும், உயர்கல்வி நிலையங்களிலும் சேருவதற்கு இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசு வேலை வாய்ப்பிலும், உயர் கல்வி பெறுவதிலும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களில் ரூபாய் 6 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்கள் கிரீமிலேயர் எனப்படுகின்றனர்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூபாய் 10.50 லட்சமாக உயர்த்த வேண்டுமென்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
எனவே, மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் பெரும்பாலானோர் அரசு வேலை வாய்ப்பிலும், உயர்கல்வி பெறுவதிலும் பயன்பெறும் வகையில் கிரீமிலேயர் உச்சவரம்பை ரூ. 10.50 லட்சமாக உயர்த்தி அவர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்'' என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT