Published : 04 Jun 2015 07:39 AM
Last Updated : 04 Jun 2015 07:39 AM

மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் தனியார் குடிநீர் ஆலைக்கு சீல்

அம்பத்தூர் வட்டம் பம்மதுகுளம் ஊராட்சியில் உள்ளது எல்லம்மன் பேட்டை கிராமம். இங்கு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக,‘ரியல் பிரஷ்’என்ற தனியார் குடிநீர் ஆலை இயங்கி வந்தது. மூன்று ஆழ்துளை கிணறுகளை போட்டு அதன் மூலம் நீரை உறிஞ்சி, பிறகு அதை சுத்திகரித்து கேன்களில் அடைத்து குடிநீர் விற்பனை செய்து வந்தது.

இதனால், பம்மதுகுளம் ஊராட்சி பகுதியில் நிலத்தடி நீர் வற்றி குடிநீர் தட்டுப்பாடும் விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் நடவடிக்கை ஏதும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் எல்லம்மன் பேட்டை கிராம மக்கள் 70-க்கும் மேற்பட்டோர் தனியார் குடிநீர் ஆலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று செங்குன்றம்- ஆவடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த புழல் போலீஸ் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் மற்றும் அம்பத்தூர் வட்டாட்சியர் லதா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் ஆலை மீது நடவடிக்கை எடுப்பதாக அப்போது அவர்கள் உறுதியளித்தனர். இதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் ஆலையில் அம்பத்தூர் வட்டாட்சியர் லதா உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அந்த ஆலை அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வந்ததுடன் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x