Published : 25 Jun 2015 09:39 AM
Last Updated : 25 Jun 2015 09:39 AM

கடலில் விழுந்து மாயமான டார்னியர் விமானத்தை தேடும் பணி நிறுத்தப்படவில்லை: கடலோர காவல்படை ஐ.ஜி. விளக்கம்

கடலில் மாயமான டார்னியர் விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்படவில்லை என்று கடலோர காவல்படை ஐ.ஜி. சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி-791’ என்ற டார்னியர் ரக விமானம் கடந்த 8-ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணிக்காகச் சென்றது. சிதம்பரம் அருகே 16 கடல் மைல் தொலைவில் பறந்துகொண்டிருந்தபோது அந்த விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. காணாமல் போன விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய மூவர் இருந்தனர்.

காணாமல் போன விமானத் தைத் தேடும் பணியில் கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை யைச் சேர்ந்த 12 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், ‘பி-8ஐ’ என்ற போர் விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 17 நாட்கள் ஆகியும் காணாமல் போன விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே, விமானத்தைத் தேடும் பணியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘ஒலிம்பிக் கேன்யான்’ என்ற அதிநவீன கப்பல் பயன்படுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இக்கப்பல் மூலம் கடலுக்கு அடியில் வீடியோ எடுத்து தேடும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதில் தடயங்கள் ஏதும் கிடைக்காததால் கப்பல் திரும்பிச் சென்றது.

இதற்கிடையே மாயமான விமா னத்தை தேடும் பணி நிறுத்தப் பட்டதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இத் தகவலை கடலோர காவல்படை மறுத்துள்ளது. இதுகுறித்து, கட லோர காவல் படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சத்திய பிரகாஷ் சர்மா ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ‘ஒலிம்பிக் கேன் யான்’ கப்பல் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட வேறு சில பணிகளை மேற்கொள்ள காக்கிநாடா சென்றுள் ளது. இப்பணிகள் முடிந்ததும் அக்கப்பல் மீண்டும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்படும். மாயமான விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளி யான தகவல் தவறானது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானம் மாயமான இடத்தில் கடலின் தன்மை, தட்பவெட்ப நிலை உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள கடல்சார் ஆராய்ச்சி ஆய்வு மையத்தின் உதவியும் நாடப்பட்டுள்ளது.

விமானம் கடலுக்கு அடியில் 3,500 மீட்டர் ஆழத்தில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அப்பகுதியில் களிமண்ணைத் தோண்டி ஆய்வுப்பணி மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

காணாமல் போன விமானத்தின் விமானி வித்யாசாகரின் மனைவி சுஷ்மா தவால் கூறியதாவது:

வங்க கடலில் 6 இடங்களை மையமாகக் கொண்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. தேடுதலை மேலும் தீவிரப்படுத்தும் பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது. இதற்காக இலங்கை அதிகாரிகளுடன் கடலோர காவல் படை பேசியுள்ளது. எனினும் எந்த தகவலும் கிடைக்காதது மிகவும் வேதனையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் காணாமல் போன விமானிகள் எம்.கே.சோனி, சுபாஷ் சுரேஷ், மற்றும் வித்யாசாகர் ஆகியோரின் குடும்பத்தை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று நேரில் சந்தித்து பேசினர். தற்போது நடைபெற்று வரும் தேடுதல் பணிகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x