Published : 17 Jun 2015 07:36 AM
Last Updated : 17 Jun 2015 07:36 AM
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.28 லட்சம் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க தேர்தல் செலவின பார்வையாளராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மன்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மேற்பார்வையில் செயல்பட பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர், வேட்பாளர்களின் செலவினங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ரம் கபூர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், செலவின பார்வையாளர் மன்ஜித் சிங், தேர்தல் நடத்தும் அதிகாரி சவரிராஜன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, எந்தெந்த வகையான செலவுகள் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்பது குறித்து முகவர்களுக்கு அதிகாரிகள் விளக்கிக் கூறினர். முகவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT