Published : 10 Jun 2015 07:29 AM
Last Updated : 10 Jun 2015 07:29 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலையில் தங்கசாலை மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் தேர்தல் அதிகாரி நடராஜ் தலைமையில் அதிகாரிகள் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு சொகுசு காரில் சோதனை நடத்தியபோது அதில் ரூ.50 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஓட்டி வந்த பிரியாசந்த் கட்டாரியா என்பவரிடம் விசாரித்தபோது, அவர் தண்டையார்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவில் ஸ்டீல் நிறுவனம் நடத்தி வருவதாகவும், வியாபாரம் தொடர்பாக பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அதைத் தொடர்ந்து ரூ.50 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அந்த பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT