Published : 15 Jun 2015 02:22 PM
Last Updated : 15 Jun 2015 02:22 PM

மதுரை: அரசு பள்ளி ஆசிரியர்களின் காலில் விழுந்து பாராட்டிய தொழிலதிபர்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் நலச்சங்கம், பெற்றோர்-ஆசிரியர் கழகம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் பிரமிளா ஜான், விஜயலட்சுமி ஆகியோர் வரவேற்றனர். பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத் தலைவர் பி.கந்தசாமி முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொழிலதிபர் ஆர்.கோபாலகிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அந்த மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர், ஆசிரியைகளை மேடைக்கு அழைத்த அவர் வரிசையாக நிற்க வைத்து திடீரென அவர்களின் காலில் விழுந்தார்.

"நானும் இப்பள்ளியின் முன்னாள் மாணவன் தான். ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்" என்று அவர் கண்கலங்கியபடி பேசியபோது, ஆசிரியர்களும், மாணவர்களும் நெகிழ்ந்தனர்.

இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறியபோது, "துபாயில் வாழும் முன்னாள் மாணவரான கோபாலகிருஷ்ணன், இப்பள்ளியில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும்படி வெளிநாட்டில் இருந்தபடியே பணம் அனுப்பி வருகிறார். இந்த ஆண்டு விழாவில் அவரே பங்கேற்று வாழ்த்தியுள்ளார்" என்றார்.

நிகழ்ச்சி நிறைவில் உதவி தலைமை ஆசிரியர் சரவணகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x