Published : 01 Jun 2015 07:55 AM
Last Updated : 01 Jun 2015 07:55 AM

மீன்பிடி தடை காலத்தை அக்டோபர்-நவம்பருக்கு மாற்ற ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை

மீன்பிடி தடை காலத்தை அடுத்த ஆண்டு முதல் அக்டோபர், நவம்பரில் மாற்ற ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

கடந்த 45 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வெள்ளிக்கிழமை இரவும், பாம்பன், மண்டபம், தேவிப்பட்டினம், தொண்டி, எஸ்.பி. பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சனிக்கிழமை அதிகாலையிலும் கடலுக்குச் சென்றனர்.

ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்கள்தான் மீன்கள் இனப்பெருக்கக் காலங்கள் ஆகும். ஆனால், மத்திய அரசோ தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 தினங்கள் மீன்பிடி தடை காலமாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது. இது குறித்து மீனவர்களிடம் மத்திய, மாநில அரசுகள் ஆலோசனை செய்து அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்த வேண்டும்.

இந்த முறை அதிக இறால் மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றதுடன் திரும்பியுள்ளோம். இப்பருவத்தில் ஒரு படகுக்கு 200 கிலோ வரை இறால் மீன்கள் கிடைக்க வேண்டும். ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 725 படகுகள் கடலுக்குச் சென்றன. ஒரு படகு தலா 90 கிலோ வீதம் இறால் மீன்களை கொள்முதல் செய்துள்ளன. மொத்தம் 65 டன் மட்டுமே கொள்முதல் ஆனது. இதன் மதிப்பு ரூ. 4 கோடி ஆகும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x