Published : 22 Jun 2015 08:17 AM
Last Updated : 22 Jun 2015 08:17 AM

2ஜி வழக்கில் திமுகவுக்கு பாஜக அரசு நெருக்கடி தரமுடியாது: திருச்சி சிவா எம்.பி. தகவல்

2ஜி வழக்கில் திமுகவுக்கு பாஜக அரசு நெருக்கடி தரமுடியாது என்று திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளரும் எம்.பி.யுமான திருச்சி சிவா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ’தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக தயாராகிவிட்டதா.. தேர்தலில் உங்களுக்கு சாதகமான அம்சம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார். முந்தைய திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களால் கிடைத்த நன்மைகளை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். எந்தவிதமான தொலை நோக்குத் திட்டங்களையும் தராத அதிமுக அரசு, முந்தைய அரசின் முத்தான திட்டங்களை முடக்கி வைத்திருப்பதையும் மக்கள் பார்க்கின்றனர். திமுக ஆட்சியில் தொழில்துறை வளர்ச் சியில் முதலிடத்தில் இருந்த தமிழகம், இப்போது 18-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. எல்லாவிதத்திலும் பாதிக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்கும் மக்கள், நிர்வாகத் திறனும் தொலை நோக்கு சிந்தனையும் கொண்ட திமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட் டார்கள். இதுபோதாதா எங்களின் வெற்றிக்கு கட்டியம் கூற?

அதிமுக-வில் சாமானியர்களும் அமைச்சர்களாக வரமுடிகிறது. திமுக-வில் அது சாத்தியமாவ தில்லையே ஏன்?

அதிமுக-வில் யார் வேண்டு மானாலும் அமைச்சராகலாம். ஆனால், எத்தனை நாட்கள் அவர்கள் அந்தப் பதவியில் நீடிப்பார்கள் என்பது நிச்சயமில்லையே. அது நிரந்தரமில்லாத பதவி. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் முக்கியப் பொறுப்புகளில் பணி யாற்றி மக்களிடையே மரியா தைக்குரிய நபராக வலம்வர நினைப்பது இயல்பு. ஒருவருக்கு பதவியைக் கொடுத்து காரணம் சொல்லாமலேயே பாதி வழியில் அதைப் பறித்தால் அரசியலில் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள்.

அதிமுக-வில் அதுதான் நடக்கிறது. ஆனால் திமுக-வில், உழைப்பவர்களுக்கு என்றைக்கும் உயர்வு உண்டு.

2016-லும் திமுக ஆட்சிக்கு வராது என்கிறாரே மு.க.அழகிரி?

அவர் தேர்தலுக்குத் தேர்தல் திமுக தோற்கும் என்றுதான் சொல்லி வருகிறார். ஆனால், கழகத்தின் லட்சிய வீரர்களும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டு நிற்கும் தமிழக மக்களும் மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என்பதில் தீர்க்கமாய் இருக்கிறார்களே!

தங்கள் ஆட்சியில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக உயர்ந்திருப்பதை சாதனையாக சொல்கிறதே பாஜக?

வேலைவாய்ப்புகளை உருவாக் காத இந்த வளர்ச்சி நிஜமான வளர்ச்சியே அல்ல. ஐந்தாறு பெரு முதலாளிகளின் வருமானத்தை ஒட்டுமொத்த நாட்டின் வருமானமாக அளவிடுவதை ஏற்கமுடியாது. எப்போதும் இல்லாத வகையில் பத்து முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பலன் மக்களைச் சென்றடையவில்லை. மறைமுக வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்குத்தான் 3.5 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்திருக்கிறது.

நேரடி வரிவிதிப்பில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வரி குறைப்பு செய்யப்படுகிறது. ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் வசூலிக்கப்படும் மறைமுக வரிவிதிப்பு சதவீதம் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. 2007-08-ல் உலக நாடுகள் பொரு ளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டன. உணவு உற்பத்தி தன்னிறைவாலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டாலும் இந்தியாவை அது பாதிக்கவில்லை. இதை உணராமல், விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத் தும் சட்டத்தை பெரு முதலாளி களுக்காக அமல்படுத்தத் துடிக் கிறது பாஜக. அதேபோல், கடந்த ஆண்டில் 33 ஆயிரம் கோடிக்கு பொதுத்துறையின் பங்குகளை விற்க இலக்கு நிர்ணயித்தவர்கள், இந்த ஆண்டு 69 ஆயிரம் கோடிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். இதுவா நாட்டின் வளர்ச்சி?

சட்டமன்றத் தேர்தலில் அலைக் கற்றை வழக்கை வைத்து திமுக-வுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் என்று சொல்லப்படுவது பற்றி..?

அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்கள் சட்டப்படி வழக்கை எதிர்க்கொண்டு வருகிறார்கள். விரைவில் உண்மை நிரூபிக்கப்பட்டு அவர்கள் நிரபராதி களாக வெளியில் வருவார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கு குறித்து மிகைப்படுத்தப்பட்ட செய் திகளே வலம் வந்து கொண்டிருக் கின்றன. எனினும், உச்ச நீதிமன்றத் தின் கண்காணிப்பில் நடக்கும் இந்த வழக்கில் மத்திய அரசு தலையீடு செய்யும் என்பது ஏற்கமுடியாத ஒன்று.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக மீது குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், திருமங்கலம் ஃபார்முலா மூலம் இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே திமுகதான் என்கிறார்களே?

1957 தேர்தலிலேயே அப்போது ஆளும் கட்சியாக இருந்தவர்கள் ஓட்டுக்கு நாலணா, எட்டணா கொடுத் ததை நாடு அறியும். இப்போது எங்களைக் குற்றம் சொல்பவர்கள் தங்களை புனிதர்களைப் போல காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இதுவரை நடந்த இடைத் தேர்தல்கள் அனைத்திலும் பணம் எப்படியெல்லாம் விளையா டியது. ஆனால், எப்போதோ நடந்த தாகச் சொல்லப்படும் சம்பவத்தை திமுக-வுக்கு எதிராக சித்தரிப்ப வர்கள், இந்த ஆட்சியாளர்களின் அத்துமீறல்களை ஏன் சுட்டிக்காட்ட மறுக்கிறீர்கள்?.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x