Published : 13 Jun 2015 10:45 AM
Last Updated : 13 Jun 2015 10:45 AM

மாயமான ‘டார்னியர்’ விமானத்தை கடல் தொழில்நுட்பம் அறிந்தோரால் மட்டுமே கண்டறிய முடியும்: கடல் ஆராய்ச்சியாளர் தகவல்

புதுச்சேரி கடல் பகுதியில் ரோந்து சென்ற கடலோரப் பாதுகாப்புப் படையின் ‘டார்னியர்’ ரக விமானம் கடந்த 8-ம் தேதி இரவு 3 வீரர்களுடன் மாயமானது. கடலோரக் காவல்படை, கடற்படை ஆகியவை இணைந்து 12 ரோந்துக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் விமானம் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கடல் உயிரின ஆராய்ச்சி யாளரும், ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்தும் ஒரிசா பாலு என்ற பாலசுப்பிரமணி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விமானம் மாயமாகி 4 நாட்கள் கடந்துவிட்டன. கடல் தொடர் பாகவும், கடல் ஆராய்ச்சியிலும் நாடு முழுவதும் ஏராளமானோர் செயல்படுகின்றனர். அனைவரும் அரசுக்கு உதவ தயாராக இருக்கிறோம்.

ஒவ்வொரு கடலுக்கும் ஒரு தன்மை உள்ளது. புதுச்சேரி, கடலூர் கடலில் பள்ளத்தாக்கு இருக்கிறது. இங்கு 50 கி.மீ. தொலைவிலேயே ஆழ்கடல் வந்து விடும். பள்ளத்தாக்கில் விமானம் விழுந்திருந்தால் ஆழ்கடலுக்குள் சென்று விடும். சேட்டிலைட் மூலம் கண்டறிவது கடினம்.

அத்துடன் புதுச்சேரி கடல் நீரை மேகம் உறிஞ்சும் தன்மை அதிகளவில் இருக்கும். ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அதை அறிவார்கள். மீனவர்களுக்கு அதிகளவில் கட்டுப்பாடு வந்ததால், அவர்கள் குறிப்பிட்ட கால அளவில்தான் கடலுக்கு செல்கின்றனர். முன்பு புதுச்சேரி கடல் பகுதியில் எரிமலை இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.

கடலைப் பற்றி நன்கு அறிந்த கடல் ஆய்வாளர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் கண்டிப்பாக உதவத் தயாராக உள்ளனர். கடல் தொழில்நுட்பம் அறிந்தோரால் தான் விமானத்தை கண்டறிய முடியும். குறைந்த எடையுள்ள டார்னி யர் விமானம் மூழ்காது என்பது தவறான கருத்து. நேர்குத்தாக விழுந்தால் மூழ்கவும், நீரோட் டத்தில் வேறு இடத்துக்கு இழுத்துச் செல்லவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அந்தமான்-இலங்கை கடற்பகுதி வரை செல்ல வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x