Published : 24 Jun 2015 07:25 AM
Last Updated : 24 Jun 2015 07:25 AM
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார செலவுகளை அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் மாநாடு கட்சி வேட்பாளர் டி.பால்ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய குடியரசு கட்சியும் போட்டியிடவில்லை. ஆனால், அக்கட்சிகளின் தலைவர்களான சரத்குமார், செ.கு.தமிழரசன் ஆகியோர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்கப்பட வேண்டும். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவுக்காக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அக்கட்சி எம்எல்ஏ எர்ணாவூர் நாராயணன், இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோரை அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.
எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 77-ன்படி வெளியிடப்பட்ட நட்சத்திர பேச்சாளர்களின் பெயர் பட்டியலில், தேர்தலில் போட்டியிடாத கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பதால் அப்பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சரத்குமார், எர்ணாவூர் நாராயணன், செ.கு.தமிழரசன் ஆகிய நட்சத்திர பேச்சாளர்களின் பிரச்சார செலவை அதிமுக வேட்பாளர் ஜெயலலிதாவின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT