Published : 08 Jun 2015 09:32 AM
Last Updated : 08 Jun 2015 09:32 AM

ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி அரசிடம் மனு செய்ய முடிவு

ஆட்டோ கட்டணத்தை மாற்றிய மைக்கக் கோரி தமிழக அரசிடம் மனு அளிக்க ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

சென்னையில் ஓடும் சுமார் 72,000 ஆட்டோக்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கி.மீ.க்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. என்றாலும், ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பாலான இடங்களில் பேரம் பேசி கட்டணம் வசூல் செய்கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு மனு அளிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியூசி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும்போது பெட்ரோல், டீசல் விலை வேறு, தற்போதுள்ள விலை நிலவரம் வேறு, அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ ஓட்ட முடியவில்லை. உதிரி பாகங்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளதால், ஆட்டோ தொழிலை நடத்த முடியவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டுமே பெட்ரோல் விலை ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மீட்டர் போட்டு ஓட்டிக் கொண்டிருந்த 75 சதவீத தொழிலாளர்கள் வேறுவழியின்றி மீண்டும் பழைய நிலைக்கு பேரம் பேசி கட்டணமாக வசூலிக்கின்றனர். எனவே, ஆட்டோக்கான கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி தமிழக அரசிடம் விரைவில் மனு அளிக்கவுள்ளோம். அரசு அறிவித்த ஜிபிஎஸ் மீட்டரை உடனடியாக வழங்கவும் வலியுறுத்தவுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x