Last Updated : 16 Jun, 2015 04:15 PM

 

Published : 16 Jun 2015 04:15 PM
Last Updated : 16 Jun 2015 04:15 PM

கர்நாடகாவில் மேகேதாட்டில் அணைக் கட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மறைமுக ஆதரவு?- விவசாயிகள் அதிர்ச்சி

கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு மற்றும் ராசி மணல் ஆகிய இரு இடங்களில் புதிதாக அணைகள் கட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக காவிரி உரிமை மீட்புக் குழு அமைக்கப்பட்டு, டெல்டா பகுதி விவசாயிகளிடம் ஆதரவு திரட்டி, காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்துப் போராடி வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் மேகேதாட்டுவை முற்றுகையிட, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் புறப்பட தயாராகினர். இதில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என 1500-க் கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஓசூரில் நேற்று நடந்த தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர், மேகேதாட்டில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பும் இல்லை, ஆதரவும் இல்லை, என தெரிவித்தார்.

இவரது கருத்து விவசாயிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமகவுண்டர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசு தெரிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் போராட்டத்தில் நாங்கள் தான் ஈடுபட்டோம். தற்போது நாங்கள் காவிரி, தென்பெண்ணை, பாலாறு இணைப்பு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டு அந்த தண்ணீர் பெங்களூர் பகுதிக்கும், கோலார் பகுதி மக்களின் தேவைக்கும் பயன்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு தண்ணீர் பயன்படுத்தப்பட்டால் அது கழிவுநீராக மீண்டும் பெங்களூரில் இருந்து தென்பெண்ணையாற்றுக்கும், கோலார் மாவட்டத்திலிருந்து குப்பம் வழியாக பாலாற்றுக்கும் தண்ணீர் செல்லும். இதன் மூலம் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகளும், தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடும் 6 மாவட்ட விவசாயிகளும் பயன்பெறுவார்கள், என்றார்.

மேகேதாட்டு அணைக் கட்டக் கூடாது என தெரிவித்துவிட்டு, தற்போது அணைக்கட்ட எதிர்ப்பு இல்லை என தெரிவிப்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராமகவுண்டர், “ஓசூரில் இன்று (நேற்று) நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த 3 மாநில விவசாயிகள் பங்கேற்றனர். அதில் மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில், தமிழக விவசாயிகள் சங்கம் அதற்கு இனி ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

தற்கொலைக்கு சமம்

தமிழக விவசாயிகள் சங்கத்தின் இந்த திடீர் முடிவு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசுவிடம் கேட்ட போது, கழுத்தில் சுருக்குமாட்டிக் கொண்டு ஊஞ்சல் ஆடுவது போல் உள்ளது. இது ஒரு தற்கொலை முயற்சியாகும். காவிரி, தென்பெண்ணை ஆற்றில் தற்போது ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டு மீன்கள் செத்து வருகிறது. தென்பெண்ணையாற்றில் கழிவு நீர் கலப்பதை வரவேற்பது குடிக்க தண்ணீர் இல்லாமல் பூச்சி மருந்து குடித்து வாழ்வதற்கு சமம். கர்நாடகா ரசாயனக் கழிவுநீர் விடுவதைத் தடுக்கத் தமிழக அரசு கர்நாடகா அரசுடன் நேரடி பேச்சு நடத்த வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x