Published : 02 Jun 2015 09:25 PM
Last Updated : 02 Jun 2015 09:25 PM
உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தால், அதிலும் ஜெயலலிதாவே வெற்றி பெறுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி குமாரசாமி முடித்து வைத்துள்ளார். அதன் பேரில், 5-வது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் பாஜகவினர் பங்கேற்றனர். பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.
தமிழக மக்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசோடு இணக்கமாகச் செல்லும் மாநில அரசின் எதார்த்தமான போக்கை, அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக கர்நாடக அரசு கூறியுள்ளது.
இது விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, ஏற்கெனவே இதுபோல பல வழக்குகள் விசாரணைக்காக உள்ளன. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை உடனே சொல்ல முடியாது. இந்த மேல்முறையீட்டு வழக்கிலும் சட்டத்தின் துணையோடு முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெறுவது உறுதி'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT