Published : 19 Jun 2015 09:57 PM
Last Updated : 19 Jun 2015 09:57 PM

மோடியின் செயல்பாடுகளால் வீழ்ச்சியை நோக்கிப் போகிறது நாடு: ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் நாடு வீழ்ச்சியை நோக்கிப் போகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் 46-வது பிறந்த நாள் விழா தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மூத்த தலைவர் குமரி அனந்தன், தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

நாட்டில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார். அவரது கணிப்பு உண்மையாகும் வாய்ப்பு உள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்பதை அத்வானியே ஒப்புக்கொண்டுள்ளார். மோடி பற்றி இதற்கு மேல் வேறு யாரும் கூற தேவையில்லை.

பாஜக அரசின் ஓராண்டில் ஊழலே இல்லை என பெருமிதம் பேசினார்கள். இப்போது ஐபிஎல் கிரிக்கெட் ஊழலில் தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லை. அவரது செயல்பாடுகளால் நாடு வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

2 நாளில் ஊழல் பட்டியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் முறைகேடுகளை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை பிரச்சாரம் செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் தடுக்கின்றனர். தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை இன்னும் 2 நாளில் வெளியிடுவோம்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஜூலை 15-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x