Published : 27 Jun 2015 08:55 AM
Last Updated : 27 Jun 2015 08:55 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஜூலை முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி உத்தரவிட்டார். இதனால் முதல்வர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை ஜெயலலிதா இழந்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி விசாரித்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மே 23-ம் தேதி மீண்டும் ஜெய லலிதா முதல்வரானார். 6 மாதத் துக்குள் எம்எல்ஏ ஆகிவிட வேண்டும் என்பதால், இன்று நடக்கும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக மாநில அரசு ஜூன் 23-ம் தேதி மேல்முறையீடு செய்தது. ஜெயலலிதா விடு தலைக்கு இடைக்கால தடை கேட்கப் போவதாகவும் கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்தார். கோடை விடுமுறை முடிந்ததும், ஜூலை முதல் வாரத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
‘மேல்முறையீடு செய்ய திமுக-வுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதால், திமுகவும் கட்டாயம் மேல்முறையீடு செய்யும்’ என்று கட்சித் தலைவர் கருணாநிதி ஏற்கெனவே கூறியிருந் தார். சொத்துக் குவிப்பு வழக்கை தொடர்ச்சியாக கையாண்டுவரும் திமுக வழக்கறிஞர்கள் மேல் முறையீட்டு மனுவை தயாரித்துள்ளனர். கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் சிலர் மேலும் கூறியபோது, ‘‘ஜெய லலிதா விடுதலையை எதிர்த்து கர் நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்திவரும் திமுகவும் மேல் முறையீடு செய்ய உள்ளது. திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் இந்த மனு ஜூலை முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள கணிதப் பிழைகள், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியது உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT