Published : 06 Jun 2015 08:54 AM
Last Updated : 06 Jun 2015 08:54 AM

கே.என்.நேரு அமைச்சராக இருந்தபோது பொது நிதியிலிருந்து கட்சியினருக்கு செலவு: லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க வேண்டும் -உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

போக்குவரத்து அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்த காலத்தில், போக்குவரத்துக் கழக பொது நிதியை கட்சியினருக்கும், வேண்டியவர்களுக்கும் செலவு செய்தது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் அரசு போக்குவரத்து கழக முன்னாள் காசாளர் என்.கோவிந்தராஜன், உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை போக்குவரத்துக் கழக பொது நிதியில் இருந்து, அப்போதைய போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேருவுக்கு வேண்டியவர்கள், கட்சியினருக்கு என செலவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சருக்கு வேண்டியவர்களின் போக்குவரத்து, உணவு, தங்கு வதற்கு, உபசரிப்பதற்கு போக்கு வரத்துக் கழக பொது நிதியை செலவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, திருச்சி மண்டலத்தில் மட்டும் அந்த 5 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழக பொது நிதியில் ரூ.32.88 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, எனது புகாரின்பேரில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் புகாரின்பேரில் 62 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 52 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன. திருச்சி மண்டலத்தில் 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை போக்கு வரத்துக் கழக பொது நிதியில் இருந்து அலுவல் முறை அல்லாத செலவினம் செய்ததற்காக எம்.செல் வராஜ் (துணை மேலாளர், கும்ப கோணம் மண்டலம்), வீ.ராஜேந் திரன் (சிறப்பு நிலை உதவியாளர், திருச்சி மண்டலம்), ஓய்வுபெற்ற மேலாண் இயக்குநர்கள் கோதண்டபாணி, எஸ்.முருகன், டி.ரெங்கராஜ், கே.மூர்த்தி, ராஜேந்திரன், டி.சுப்பாராஜ், ஓய்வுபெற்ற பொது மேலாளர் எஸ்.சிங்காரம் மற்றும் எஸ்.சந்திர சேகரன் (கும்பகோணம் பொது மேலாளர்), பி.முகமதுசலீம் (சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்), பி.சந்திரசேகரன் (விழுப்புரம் மண் டல பொது மேலாளர்), எஸ்.மணி முத்து (கோவை மண்டல பொது மேலாளர்), ஏ.பாரூக்அலி (நிதி ஆலோசகர், கும்பகோணம்), பி.வெங்கடாசலம் (முதன்மை தணிக்கை அலுவலர், கும்பகோ ணம்) உள்ளிட்ட 18 அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:

புகாரில் முகாந்திரம் இருந்தால் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் புகாராக இருந்தால், நேரடியாக வழக்கு பதிவு செய்யாமல் முதல்கட்ட விசாரணை நடத்தி போதிய ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம். மனுதாரரின் புகார் மீது நடத்தப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில் அரசு போக்குவரத்துக் கழக பொது நிதி தேவையில்லாமல் செலவு செய்திருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் வழக்கு பதிவு செய்யவில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. வழக்கு பதிவு செய்வதற்கு போதிய ஆதாரம் இல்லை எனப் போலீஸார் தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது.

சமூகத்தின் மிகப்பெரிய அச் சுறுத்தலாக ஊழல் உள்ளது. புற்று நோய் போல் ஊழல் வேகமாகப் பரவக்கூடியது. புற்றுநோயை குணப்படுத்த எவ்வளவு தீவிர மாக முயற்சி எடுக்கிறமோ, அது போல் ஊழலை ஒழிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஊழலை அலட்சியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். எனவே, மனுதாரரின் புகார் குறித்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து சட்டப்படி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x