Last Updated : 09 Jun, 2015 12:25 PM

 

Published : 09 Jun 2015 12:25 PM
Last Updated : 09 Jun 2015 12:25 PM

புதுச்சேரியில் மாயமான கண்காணிப்பு விமானத்தை தேடும் பணி தீவிரம்: ஆபரேஷன் ஆம்லா ஒத்திவைப்பு

காணாமல் போன இந்திய கடலோர காவல்படை விமானத்தை தேடும் பணி புதுச்சேரி கடல் பகுதியில் தீவிரமாக நடந்து வருகிறது.

இதனையடுத்து, இன்று காலை தொடங்கவிருந்த தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திக்கை (ஆபரேஷன் ஆம்லா) ஒத்திவைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து திங்கள்கிழமை மாலை சிறிய ரக விமானம் காரைக்கால் நோக்கிச் சென்றது. சிறிய விமானத்தில் 2 பைலட்டுகள், உதவியாளர் என 3 பேர் இருந்தனர். இரவு 10 மணி அளவில் விமானம் திருச்சி கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்து விலகியுள்ளது.

காணாமல் போன விமானத்தை தேடுதம் பணி புதுச்சேரி, காரைக்கால், கடலூர் பகுதிகளில் கடலில் தீவிரமாக நடந்து வருகிறது.

முதலில், விமானம் காரைக்கால் - சீர்காழி கடல் எல்லையில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. பின்னர் திருமுல்லைவாசல் பகுதியில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதனால் விமானம் இருக்கும் இடம் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறும்போது, "விமானத்தில் பாராசூட் உள்ளது. அதனால் உயிருக்கு ஆபத்து இருக்காது என நம்புகிறோம். குட்டிவிமானம் மூழ்கக்கூடிய தன்மையுடையது அல்ல. அதனால் கண்டறிந்து விடலாம். புதுச்சேரி, கடலூர், காரைக்கால் பகுதி மீனவர்களுக்கு தகவல் தந்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

ஆபரேஷன் ஆம்லா நிறுத்தம்:

இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கிவிருந்த ஆபரேஷன் ஆம்லா (தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை) நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்துவதாக உளவுத்துறைக்கு வந்த தகவலையடுத்து மத்திய அரசு கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் அனைத்து மாநில கடலோர காவல்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆண்டுதோறும் 6 மாதத்துக்கு ஒருமுறை தீவிரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவதைத் தடுப்பதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் ஆம்லா நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 6 முறை நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கவிருந்த ஆபரேஷன் விமானம் மாயமான சம்பவத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x