Published : 29 May 2014 08:06 AM
Last Updated : 29 May 2014 08:06 AM

ஜூன் 8-ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா: தமிழக முதல்வர் பங்கேற்கிறார்

சீமாந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 8-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திலிருந்து பிரிந்து வரும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானா மாநிலம் நாட்டின் 29வது மாநிலமாக உருவாக உள்ளது. அன்றைய நாளே, தெலங்கானாவின் முதல்வராக, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே. சந்திர சேகர் ராவ் பதவியேற்கிறார்.

சீமாந்திராவின் முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி, குண்டூர்-விஜயவாடா இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆந்திர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 2-ம் தேதி தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி தன்னிச்சையாக ரத்தாகி விடும். ஆனால், சீமாந்திராவில் மட்டும் வரும் ஜூன் 8-ம் தேதி சந்திரபாபு நாயுடு பதவி பொறுப்பேற்கும் வரையில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x