Published : 28 Jun 2015 09:03 AM
Last Updated : 28 Jun 2015 09:03 AM

நாமக்கல் அருகே தலை துண்டிக்கப்பட்ட பொறியியல் மாணவர் உடல் பிரேதப் பரிசோதனை: வீடியோவில் பதிவு - உடலை வாங்க பெற்றோர் மறுப்பு

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் உடலை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், கோகுல்ராஜின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்ததால், தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவுகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், சடலமாக கிடந்தார்.காதல் விவகாரத்தில், கோகுல் ராஜ் படுகொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் குற்றம்சாட்டி கடந்த 3 நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கோகுல்ராஜின் உடலை சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதி மன்றம், கோகுல்ராஜ் உடலை சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி துணை முதல்வரும், தடய அறிவியல் துறை தலைவருமான மருத்துவர் சம்பத்குமார் தலைமையிலான குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்யவும், அதை வீடியோ பதிவு செய்து, அதன் விவரங்களை முத்திரையிட்ட கவரில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நேற்று காலை மருத்துவர் சம்பத்குமார் தலைமையிலான குழுவினர் சேலம் அரசு மருத்துவ மனைக்கு வந்தனர். கோகுல்ராஜின் பிரேதப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடந்தது. இச்சம்பவத்தை ‘கொலை வழக்காக பதிவு செய்யும் வரை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும், நீதிமன்றத்தில் எங்கள் அனுமதி இல்லாமல் யாரோ ஒருவர் உத்தரவு பெற்றுள்ளதாக கூறி கோகுல் ராஜின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனையில் திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மதியம் 2 மணி அளவில் கோகுல்ராஜின் உடலை மருத்துவர் சம்பத்குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யும் வரை கோகுல்ராஜின் உடலை வாங்க மாட்டோம் என கூறி கோகுல்ராஜின் உறவினர்கள் நேற்று மாலை வரை உடலை வாங்கவில்லை. இதையொட்டி, சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் கூறும்போது, இந்த வழக் கில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பிரேதப் பரிசோதனை செய்யப்பட் டுள்ளது. இதன் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x