Published : 10 Jun 2015 11:55 AM
Last Updated : 10 Jun 2015 11:55 AM

செட்டிநாடு குழும அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செட்டிநாடு குழும அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

செட்டிநாடு குழும நிறுவனங்களான செட்டிநாடு சிமென்ட், மருத்துவமனைகள், மின் உற்பத்தி நிலையம், செட்டிநாடு சிலிகா நிறுவனம், லாரி மற்றும் கப்பல் நிறுவனங்கள், நிலக்கரி நிறுவனம், கட்டுமானம் மற்றும் ஜவுளி நிறுவனங்கள், ஸ்டீல் நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள், அரண்மனைகள், வீடுகள் உட்பட செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

சென்னையில் கோட்டூர்புரம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரண்மனை போன்ற வீடுகள், எழும்பூரில் உள்ள ராணி சீதை ஹால் மற்றும் அங்குள்ள அலுவலகங்கள், அண்ணா சாலையில் உள்ள செட்டிநாடு குழுமங்களின் தலைமை அலுவலகம், எண்ணூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி, கரூர் மாவட்டம் புலியூர் மற்றும் அரியலூரில் உள்ள செட்டிநாடு சிமென்ட் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள செட்டிநாடு நிறுவனத்துக்கு சொந்தமான அஞ்சலி சிமென்ட் நிறுவனம், கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியில் உள்ள சிமென்ட் நிறுவனம் மற்றும் மும்பையில் செட்டிநாடு நிறுவனம் செயல்படும் 2 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களிலும், வெளி மாநிலங்களில் 5-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 450 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சரியாக காலை 9.30 மணிக்கு சோதனை தொடங்கியது.

கடந்த 6 ஆண்டுகளாக செட்டிநாடு குழும நிறுவனங்கள் சரியான முறையில் வருமான வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை மையமாக வைத்தே சோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையில் பல இடங்களில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே வரி முறைகேடு நடந்திருக்கிறதா என்பது தெரியவரும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, செட்டிநாடு குழும நிறுவனங்களின் கவுரவ தலைவர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும், அவரது வளர்ப்பு மகன் முத்தையா என்ற ஐயப்பனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

தற்போது செட்டிநாடு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐயப்பனுக்கும், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் இடையே சொத்துகளை கைப்பற்றுவதில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து நடந்த பிரச்சினைகளையடுத்து, ஐயப்பனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்ததை சட்டப்படி ரத்து செய்வதாகவும் எம்.ஏ.எம்.ராமசாமி அறிவித்தார். நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு வரவழைத்து பேட்டியும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x