Published : 10 Jun 2015 07:26 AM
Last Updated : 10 Jun 2015 07:26 AM

இடைத்தேர்தல் எதிரொலி: மத்திய அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுமதி மறுப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடப்பதால் சென்னையில் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.

ஜூன் 27-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் சென்னை மாவட்ட எல்லைக்குள் அரசு சாதனைகளை விளக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நரேந்திர மோடி அரசின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நாடு முழுவதும் மாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி நேற்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மத்திய தொழில், வர்த்தக துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தை விதிகளினால் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. இதனால் நிர்மலா சீதாராமன் தனது சென்னை வருகையை ரத்து செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x