Published : 13 Jun 2015 10:47 AM
Last Updated : 13 Jun 2015 10:47 AM

அரசு விழாக்களில் அசைவ உணவு பரிமாற தடை கோரிய மனு தள்ளுபடி

அரசு விழாக்களில் அசைவ உணவு பரிமாறக் கூடாது என அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த ராமலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு விழாக்கள், கூட்டங்களில் பொதுமக்களின் நிதியில் இருந்து அசைவ உணவு பரிமாறக்கூடாது எனக் கேட்டு முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டது. அந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது என அரசு பதில் கடிதம் அனுப்பியது.

இந் நிலையில், அரசு கூட்டங்கள், விழாக்களில் அசைவ உணவு பரிமாறுவதில்லை என 12.03.13-ல் கொள்கை முடிவு எடுத்திருப்பதாக அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. ஆனால் சென்னையில் 11.12.13-ல் நடைபெற்ற காவல் துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அசைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. இது சைவத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களை துன்புறுத்து வதாகும்.

அரசின் கொள்கை முடிவு அனைத்து துறைகளுக்கும் அனுப் பப்படவில்லை. எனவே, அரசு கூட்டங்கள், விழாக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும் என்று எடுக்கப்பட்ட கொள்கை முடிவை சுற்றறிக்கையாக அனைத்து துறைகளுக்கும் அனுப்ப உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நாட்டில் 80 சதவீதம் பேர் அசைவ உணவு சாப்பிடுகின்றனர். உணவு விவகாரங்களில் யாரையும் நிர்ப்பந்தம் செய்ய முடியாது. எனவே, மனுதாரர் கூறுவதுபோல் உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x