Published : 28 Jun 2015 09:19 AM
Last Updated : 28 Jun 2015 09:19 AM
போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பள்ளி கொண்டா காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்து, நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்துள்ள குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா(23) காணாமல் போனது குறித்து பள்ளிகொண்டா போலீஸார் கடந்த மாதம் 25-ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹ்மது (26) என்பவரை கடந்த 18-ம் தேதி விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அவரை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது மறுநாள் (19-ம் தேதி) அவரை போலீஸார் விடுவித்துள்ளனர். வீடு திரும்பிய ஷமீல் ‘பள்ளி கொண்டா ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் மற்றும் போலீஸார் தன்னை கொடூரமாக அடித்து துன்புறுத்தினர்’ என்று கூறி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், 25-ம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 26-ம் தேதி மாலை அவர் இறந்தார்.
ஷமீல் இறந்த தகவலால் ஆம்பூரில் பதற்றம் ஏற்பட்டது. ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆம்பூர் நகர காவல் நிலையத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சபாரத்தினம், போலீஸார் நாகராஜ், அய்யப்பன், சுரேஷ், முரளி, முனியன் ஆகியோர் ஷமீல் அஹ்மதுவை காவலில் வைத்து தாக்கியதாக அலி அக்பர் (40) என்பவர் அளித்த புகாரின்பேரில் பள்ளிகொண்டா போலீஸார், 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘ஷமீல் அஹ்மது மரணம் குறித்து வேலூர் ஜே.எம்.1-வது நீதிபதி மும்மூர்த்தி விசாரணை நடத்துவார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் நீதிபதி மும்மூர்த்தி முன்னிலையில் ஷமீல் உடல் பிரேதப் பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நீதிபதி விசாரணை நடத்துவார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT